Saturday, May 17, 2014

திருவாசகம் - அன்னைப் பத்து - part 2/3



ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர்
வேடம் இருந்தவா றன்னே என்னும்
வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம்
வாடும் இதுஎன்னே அன்னே என்னும்.



ஆடும் பாம்பை
ஆபரணமாய் அணிந்தவர் என்றும்,
அச்சம் தரும் புலியின் தோலை
அரையில் அணிந்தவர் என்றும்,
அங்கம் எங்கும் திருநீறு
அப்பியிருப்பவர் என்றும்,
அவரை எண்ணியே என்மனம்
அலைகின்றதே 
என்றெல்லாம் நின்மகள்
எடுத்தியம்புவாள்.

நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர்
பாண்டிநன் னாடரால் அன்னே என்னும்
பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை
ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும்.

நீண்ட கையுடையவர்,
வளைந்த சடைமுடி தரித்தவர்,
பாண்டிய நாட்டைப்
பாதுகாப்பவர்;
அலைபாயும் மனத்தை
அடக்கி ஆளும் வல்லமை
அளிப்பவர்
என்றெல்லாம் நின்மகள்
எடுத்தியம்புவாள்.


உன்னற் கரியசீர் உத்தர மங்கையர்
மன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும்
மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார்
என்ன அதிசயம் அன்னே என்னும்.

அரியபல புகழ் பெற்ற
அழகில் சிறந்த
திருவுத்தரகோச மங்கையைத்
துணையாகக் கொண்டவர்; அவரே
தன் நெஞ்சில் நிலைத்திருப்பவர்;
திருமாலும் நான்முகனாலும் காண முடியாத அவர்
தன் நெஞ்சில் நிலைத்திருப்பது
என்னே ஆச்சரியம்
என்றெல்லாம் நின்மகள்
எடுத்தியம்புவாள்.


( தொடரும் )

Tuesday, May 13, 2014

திருவாசகம் - அன்னைப் பத்து



வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதர்இந் நாதனார் அன்னே என்னும்.
வேதங்களின் வேர்,
திருநீறு பூசியத் தலைவன்,
செம்மையான மேனியில்
சொலிப்பவன்,
பறையொலி கேட்டே
பரவசமடைபவன்;
தெய்வங்களுக்கெல்லாம்
தெய்வமாய் நிற்பவன்
என்றெல்லாம் நின்மகள்
எடுத்தியம்புவாள்.

கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர்
உண்ணின் றுருக்குவர் அன்னே என்னும்
உண்ணின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால் அன்னே என்னும். 

கருணைக் கடல் அவர்,
கண்ணில் மை தீட்டியிருப்பார்,
கன்னி என் உள்ளத்தைக் 
கவர்ந்தவர்,
கண்ணீர் பெருக ஆனந்தத்தில்
ஆழ்த்துபவர்
என்றெல்லாம் நின்மகள்
எடுத்தியம்புவாள்.

நித்த மணாளர் நிரம்ப அழகியர்

சித்தத் திருப்பரால் அன்னே என்னும்

சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை

அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும்.

நித்தம் மணவிழாக் கோலம் கொண்டவர்,
நிறைய அழகு உடையவர்,
நீங்காதென் மனதில்
நிறைந்தவர், அவ்வாறு
நீங்காது
நிறைந்தவர்
தென்னாட்டில் உள்ள
பெருந்துறைக் கடவுள்
என்றெல்லாம் நின்மகள்
எடுத்தியம்புவாள்.


( தொடரும் )