Wednesday, November 30, 2011

மெய்ப்பொருள் நாயனார் - 1

அழகான சேதி நாடு;
அந்நாட்டின் தலைநகரமாம் திருக்கோவலூர் என்ற ஒரு ஊர்;
அந்தகாசுரன் என்ற
அரக்கனைச் சிவன்
அழித்த ஊர்
அந்த ஊர்;
அதனாலேயே சிவபக்தி
அளவுக்கதிகமாய் நிரம்பி வழிந்த ஊர்
திருக்கோவலூர்.

மக்கள் சேவையே அந்த
மகேசன் சேவை என்று எண்ணி
மண் ஆண்டு வந்தான்
மன்னன் மெய்ப்பொருளார்.


      அரசியல் நெறியின் வந்த
        அறநெறி வழாமல் காத்து
      வரைநெடுந் தோளால் வென்று
        மாற்றலர் முனைகள் மாற்றி
      உரைதிறம் பாத நீதி
        ஓங்குநீர் மையினின் மிக்கார்
      திரைசெய்நீர்ச் சடையான் அன்பர்
        வேடமே சிந்தை செய்வார்.


செயலில் தவறேதும் இல்லாது, சொல்லில்
சினம் கொள்ளாது, நெஞ்சில்
சிவனைக் கொண்டு,
சிவனடியார்களைக் காத்து, அவர்கட்கு
சேவை செய்து,
செங்கோல் வழுவாது ஆட்சிசெய்து வந்தான்;

எதிரியையும் நண்பனாய் எண்ணினான்;
அண்டவர்கெல்லாம்
அடைக்கலம் தந்தான்;
அப்படியிருந்தும்
அவருக்கெதிராய்
முத்தநாதன் என்ற மூடன்
முணுமுணுத்து வந்தான்; போரில்
மெய்ப்பொறுளாரை வெல்லமுடியாதென அறிந்த
முத்தநாதன் பொய் சூழ்ச்சி செய்து காரியம்
முடித்து விட எண்ணினான்;
மெய்ப்பொறுளாரைக் கொன்று
நாட்டைத் தன் வசமாக்கிக் கொள்ள
நினைத்தான்
நயவஞ்சகன்;

                                                                        ( தொடரும் )

Friday, November 25, 2011

கண்ணப்ப நாயனார் கதை - 6

இன்னும் சோதிக்க
இறைவன் எண்ணினார்;
இன்னொரு கண்ணிலிருந்து
இரத்தம் வரவழைத்தார்;

பார்த்தான் திண்ணன்;
பதறாது நின்றான்;

உதிரம் நிற்கும்
உபாயம்
உணர்ந்தவனன்றோ அவன்;

இன்னொரு கண் இருக்க
கவலை
எதற்கு எனக்கு என்று
எண்ணினான்;

இன்னொரு கண்ணைத் தருவேன்,
இரத்தம் வருவதைத் தடுப்பேன்
என்றுரைத்தவாறு தன்
இன்னொரு கண்ணைப் பிடுங்க
எண்ணினான்;
அப்பொழுது தான் ஒரு உண்மை
உணர்ந்தான்;
என் இன்னொரு கண்ணையும்
எடுத்து விட்டால்,
எப்படி வைப்பேன்
எம்பெருமானுக்குச் சரியான இடத்தில்
கண்ணை ?
இடது கண்
இருக்கும் இடம்
எனக்கு எப்படித் தெரியும்
என்று சிந்திக்கத் தொடங்கினான்;

இடக் கண்
இருக்கும் இடத்தில் தன்
கால் விரல் பதித்துக் கொண்டான்;
கண்ணை நோண்ட
கணை எடுத்தான்;

அப்பொழுதே ஒரு குரல்,
அங்குக் கேட்டது;
'கண்ணப்பா நில்,
கடவுள் உனக்கு எதிரில்;
காயம் இல்லை,
கவலை கொள்ளத் தேவை இல்லை;
உன்
அன்பை
அனைவருக்கும்
அறிவிக்க யாம்
ஆடிய ஆட்டமிது';

சிவன் வந்தான்;
தனக்குக் கண் தந்த
திண்ணப்பனுக்குக் 'கண்ணப்பன்' என்றுத்
திருநாமம் தந்தான்;
தூய அன்பைத்
துணை கொண்டுத் தொழுவோர்
துயர் துடைக்கப் பரமன்
துணை செய்வான் என்றறிவித்தான்;

கண்ணப்பன் என்ற திண்ணப்பனின்
கதை படிப்போருக்கெல்லாம்
கைலாய மலை வாழும் ஈஸ்வரன்
கிருபை கிடைக்குமென்பது நம்பிக்கை;

                                                                           ஓம் நமசிவாய

Thursday, November 24, 2011

கண்ணப்ப நாயனார் கதை - 5

அனுதினமும் எம்பிரானுக்குப்
ஆத்மார்த்த பூசை செய்யும் பூசாரி
ஆலயம் அசுத்தம்
அடைவது எங்கனம் என்று
அறிய, தனக்குத் தெரிவிக்க
அந்தப் பரமசிவனை வேண்டினார்;
ஆண்டவனும்
அவர் கனவில் தோன்றினார்;
'அஞ்ச வேண்டாம், என்மேல்
அளவில்லாத அன்பு கொண்டவன் செயல் தான்
இது;
என் சிந்தனையே
எப்பொழுதும் கொள்வதால் நேர்ந்தது அது;
அவன் அன்பை
விரும்புது என் மனது;
நாளை ஒரு தினம்
அவன் காட்டும் அன்பை
அருகிலிருந்து,
ஆனால்
அவன் காணாதவாறு மறைந்திருந்துக் காணவும்’
கனவில் சிவன் சொல்ல, அதற்குக்
கட்டுப்பட்டுக் காரியம் செய்தார் பூசாரி;

ஆண்டவன் மேல்
அன்பு கொண்டு
அவன் அங்கேயே இருப்பதில்
அன்று ஏழாவது நாள்.
அரிய பொருட்களையெல்லாம்
அள்ளி எடுத்துவந்து
ஆசைப்பட பூசை செய்ய
ஓடோடி வந்தான் திண்ணன்.

பூசாரி மறைந்திருந்துப் பார்க்கப்
பூசை செய்தான் திண்ணன்;
அவன் அன்பைச் சோதிக்க
ஆசைப் பட்டான்
அர்த்தநாரீஸ்வரன்;

திண்ணன்
உள்ளே நுழைகையில் தன்
வலது கண்ணிலிருந்து ரத்தம்
வரவழைத்தான்
உமா மகேஸ்வரன்;
பார்த்தான்,
பதறினான்,
செய்வதறியாது
திகைத்து நின்றான்
திண்ணன்;
ஏதாவது மிருகம்
எங்கிருந்தாவது வந்திருக்குமோ
என்று இங்கும் அங்கும் தேடினான், ஓடினான்;
ஏதும் தவறு நேர்ந்திருக்குமோ
என்று நினைத்து அழுதான்;
காட்டிலிருந்து மூலிகைகள்
கொண்டு வந்தான், சிவனின்
கண்ணில் பிழிந்து பார்த்தான்;
ரத்தம் நிற்கவில்லை;
நிஜமாய் நேர்ந்திருந்தால் தானே
நிற்பதற்கு,
பொய்யாய்ப் பொங்கிய ரத்தம்
எங்கிருந்து நிற்கும் ?

யாரோ என்றோ சொன்ன
'கண்ணுக்குக் கண், கைக்குக் கை'
என்ற சொற்றொடர் நினைவுக்கு
வந்தது;
துள்ளி எழுந்தான்
திண்ணன்;
தன் வலது கண்ணை
அம்பு கொண்டு நெம்பி, கிழித்து
வெளியிலெடுத்தான்; சிவனின்
வலக் கண் மேல்
வைத்தான்; ரத்தம்
வருவதும் நின்றது; திண்ணனின்
வருத்தமும் நின்றது;

இன்னும் சோதிக்க
இறைவன் எண்ணினார்;
இன்னொரு கண்ணிலிருந்து
இரத்தம் வரவழைத்தார்;


                                                                        ( கதை தொடரும் )

Friday, November 18, 2011

கண்ணப்ப நாயனார் கதை - 4

எப்பிறவியில்
என்ன தவம் செய்தானோ திண்ணன்
இப்பிறவியில்
சிவன் மேல் ஆர்வம் வர
சிவவயப்பட்டான்;

சிவபெருமானைக் கண்டான்;
கண்ணீர் மல்கச் சேவித்தான்;
தன் வசம் இழந்து நின்றான்;
இந்த அடர்ந்த வனத்தில்
காவலுக்கு எவரும் இல்லாது
இருப்பது முறையா என்று வினவினான்
உலகையே கட்டிக் காப்பவனை;

திண்ணா, யாரோ பூஜை செய்த மலர் சிவன்
திரு மேனியில் இருக்கிறதே பார் என்றான்
திண்ணனுடன் கூட வந்தவன்;
தினமும் பூஜை மட்டும் செய்து விட்டுத்
திரும்பிவிடுகிறார் அவர் என்று
தெரிந்துக் கொண்டான் திண்ணன்;

பூசை முடிந்தது,
புசிக்க உணவு தர வேண்டாமா என்று சொன்னான்;
உடனே ஓடினான்,
நண்பன் சமைத்து வைத்த
பன்றிக் கறியில்
பக்குவமாய் வெந்த
பாகத்தைத் தான் தின்றுப்
பரிசோதித்து
ஒரு இலையில் வைத்துக்கொண்டு
ஓடி வந்தான் மீண்டும்;

உண்ணச் சொல்லி,
தள்ளி நின்றான்;
நண்பர்கள் வந்தனர்;
பைத்தியமா நீ என்று
அதட்டினர்; நாகனை
அழைத்து வருவோம் என்று
தம் வழி சென்றனர்;

திண்ணன் சிவனை விட்டு
அசையாது நின்றான்;
காவல் புரிந்தான்;
தினமும் சேவை செய்தான்;

தன் தலையில் பூவைச் சொருகி,
வாயில் நீரை நிரப்பி வந்து,
தன்
பாதத்தாலே
பழைய பூ மாலை மாமிசங்களை
விலக்கி,
வாயிலிருக்கும் நீரை
சிவன் தலையில் துப்பி,
தன் தலையிலிருக்கும் பூவைச்
சிவன் தலையில் சூட்டுவான்;
மிருகங்களை வேட்டையாடி
மாமிசம் கொண்டு வந்து,
வாயில் வைத்து உண்ணும் வரை
விலகி நிற்பான்;

ஒவ்வொரு முறையும்
திண்ணம் இப்படி
பூசை செய்வான்;
பின் சிவபெருமானின்
பசியாற்ற மான், பன்றி, முயல் என்று
பார்த்துப் பார்த்து வேட்டையாடித்
தான் உண்டு, சுவையானதை மட்டும்
விருந்தாய்ப் படைப்பான் ;

வேட்டையாட இவன் செல்ல,
சிவலிங்கத்திருக்கு தினம்
பூசை செய்யும் பூசாரி வர,
மாமிசத் துண்டு அங்கு சிதறிக் கிடக்க,
அதைக் கண்டு அவர் முகம் சுளிக்க
தினம் இக்கூத்து
தொடர்ந்து நடந்தது;

அழகான சுத்தமானக் கோவிலை இப்படி
அசுத்தம் செய்வது
ஆரெனத் தெரியாது
அவதியுற்றார்;
ஆத்திரப்பட்டார்;

பூசாரி கோவிலைச் சுத்தம் செய்து
பூசை செய்து
புறப்பட, அவரைத் தொடர்ந்து
திண்ணம் நுழைந்து
தன் ஆசைப்படி பூசை செய்ய,
தினம்
தொடர்ந்தது இத்
திருவிளையாடல்;

                                                                        ( கதை தொடரும் )

Thursday, November 17, 2011

கண்ணப்ப நாயனார் கதை - 3

மிருகங்களின் தோல்
மற்றும் இதர பாகங்களைக் கொண்டே
சீராக அலங்கரிக்கப்பட்டான்
சிறுவன் திண்ணன்;
காட்டுப் பன்றிகளையும்
காட்டு நாய்களையும்
ஓடிப் பிடித்து
விளையாடி மகிழ்ந்தான்;
வில் வித்தையும் மற்ற கலைகளையும்
விவரித்தான் கற்றுத்தந்தான்
திண்ணனுக்கு அவன் அப்பன்;

கலையாவும் கற்றத் திண்ணன்
காவலாய் நின்றான் அவன் குலத்திற்கு;

நாலு திசைகளிலும் பறை அறிவித்தான்
நாகன்,
திண்ணனே
தனக்கடுத்து நாடாளும்
தலைவன் என்று; அதனை நிரூபித்தான்
திண்ணனும் பல மிருகங்களைக் கொன்று;

விலங்குகளின் தொல்லை மிகும்
வேளைகளிலெல்லாம்
வேட்டைக்குக் கிளம்புவதே
வீரன் திண்ணனின் வேலை;

ஒருநாள் அதுபோல்
ஒருசில வேடவரோடு
வேட்டையாடப் புறப்பட்டான்
திண்ணன்;
வேடவர்களின்
மன்னன்;

காட்டு மிருகங்கள்
கரடி புலி
காட்டுப் பன்றி எனக்
கண்ணில் கண்டவற்றையெல்லாம்
கொன்று குவித்தனர்;
அம்புகளிலிருந்துத் தப்பிப் பிழைக்க
அனைத்து மிருகங்களும்
ஓடி ஒளிந்தன;

ஒரு காட்டுப் பன்றி,
ஓடியது ஓடியது ஒளிந்து ஒளிந்து ஓடியது;
திண்ணனும் வேறு இருவரும்
துரத்தினர் துரத்தினர் விடாது துரத்தினர்;

திண்ணன் துரத்த
பன்றி ஓடிய அந்த இடம்
காலஹஸ்தி மலை ஆகும்.
மலையில் ஒரு மரத்தின் கீழ்
அந்தப் பன்றி வந்து நின்றது;
அம்பு விட்டான்;
அந்தப் பன்றியைக் கொன்றான்;
அகோர பசி ஏற்பட்டதால்
அந்தப் பன்றியைச் சமைக்க
ஆணையிட்டான்; மலையின்
அடுத்தப் பக்கத்தில் பொன்முகலி
ஆற்றில் நீர் எடுத்து வர திண்ணனும்
அவனோடு இன்னொருவனும் வந்தனர்;

நீர் எடுக்க வந்தவன்
விழியில் விழுந்தது, மலையில்
உச்சியில் இருந்த
குடுமித்தேவர் ஆலயம்;
குடுமித்தேவன் என்ற பெயரில் அங்கு
குடிகொண்டவன் அந்தப் பரமசிவன்;

ஏதோ ஒரு உணர்வு
எங்கிருந்தோ உந்த
எழுந்து நடந்தான் திண்ணன்,
சிவாலயம் இருந்த திசை நோக்கி,
எம்பெருமான் சிவனை தரிசிக்க வேண்டி;

                                                                        ( கதை தொடரும் )

Wednesday, November 16, 2011

கண்ணப்ப நாயனார் கதை - 2

போதப்பி நாடு;
மலைகளும் அடர்ந்த காடுகளும்
நிறைந்த நிலப்பரப்பு;
பச்சை பசெலேன வயல்கள்;
துள்ளிக் குதித்து விளையாடும்
புள்ளி மான்கள்;
ஆடுகள், மாடுகள்; இன்னும்
யானைகள்;

பயம் கருணை இரண்டும் இல்லா
இவ் வேடவர் குலத்திற்குத்
தலைவன்
நாகன் என்பவன்.
குற்றம் செய்வதைத் தன் குலத்
தொழிலாய்க் கொண்டவன்;
வன மிருகங்களைத் தன்
விருப்பம் போல்
வதைத்து வந்தான்;
தத்தை என்பவள் நாகனுக்குத்
தாரமானவள். எப்பொழுதும்
புலிகளின் நகத்தையும்,
பாம்புகளின் தோலையும்
ஆபரணமாய்
அணிந்திருப்பாள்;

வன விலங்குகள் நிறைந்த
வனத்தில் வேட்டையாடி
வாழ்ந்து வந்த நாகன்
தத்தை தம்பதியருக்குப்
பிள்ளை இல்லை என்ற
பெருங் கவலை இருந்தது;
விலங்குகளை
வேட்டையாடிக் கொன்ற
வேந்தனை இக்கவலை
வேட்டையாடாது கொன்றது;
அவர்கள்
மகிழ்வைத் தின்றது;

தன்னால் முடியவில்லை என்று
தெரிந்த பின் ஆண்டவனை எண்ணத்
தொடங்கியது மனித மூளை;


அழகாய் ஒரு
ஆண் மகவு வேண்டி
அந்த
ஆறுமுகனைத் துதித்தான்
அரசன்;

தத்தை கர்ப்பமானாள்; பிள்ளையின்
தந்தை மகிழ்ந்துபோனான்;

மகவு பிறந்தது;
மகிழ்ச்சி பொங்கியது;

வலியவனாய்ப் பிள்ளை; அதனால்
வைத்தான் தந்தை 'திண்ணன்'
என்னும் பெயரை;

                                                                        ( கதை தொடரும் )

Tuesday, November 15, 2011

கண்ணப்ப நாயனார் கதை - 1

                                    கண்ணப்ப நாயனார்

ஓம் நமசிவாய

வேடன்,
வேட்டையாடி மிருகங்களைக் கொல்வதேத் தன்
குலத் தொழிலாய் கொண்டு வளர்ந்தவன்;
வேட்டையாடுவதைத் தவிர
வேறொன்றும் அறியாதவன்;
பாவம் பார்க்காது வாயில்லாப்
பறவைகளையும் மிருகங்களையும்
கொன்று குவித்து வாழ்பவன்;
அவன்தான் திண்ணப்பன் என்பவன்;
அந்தச் சிவனால் கண்ணப்பன் என்று
அழைக்கப்பட்டவன்;
அவன் கதை ...



                                                                        ( கதை தொடரும் )

Friday, November 11, 2011

உத்தவ கீதை - 8

கொல்லன்,
தன் பட்டறையில்
தன் வேலையில்,
கண்ணும் கருத்துமாக,
வேறு சிந்தனை
ஏதுமின்றி,
எப்படி உழைக்கிறானோ
அப்படி இறைவன் மேல்
எப்பொழுதும்
கவனம் கொண்டு செயல்பட்டால்
கவலை இல்லாது
கரையேறலாம் என்று
கொல்லன் எனக்குக் கற்பித்தான்;

பாம்பு,
தனியாய் வசிக்கும்;
ஆள் ஆரவாரம் கேட்டால்
அக்கணமே அங்கிருந்து ஓடிவிடும்;
அதுபோல் தனியே
அதிகம் பேசாது
அடக்கமாக வாழ்.
பாம்பு சொல்லித் தந்தப்
பாடம் இது;

பட்டுப் பூச்சி
பட்டு நூல்களை உற்பத்தி செய்து வலை
பின்னுகிறது,
பின்னொரு நாளில்
பின்னிய வலையைத் தானே தின்னுகிறது;
படைக்கும் பொருள் அனைத்தையும்
பிரளயக் காலத்தில்
பரம்பொருளே அழிக்கிறார்;
பட்டுப் பூச்சி கற்றுத் தந்தப்
பாடமிது;

குளவி, தன் கூட்டில்
புழுவை அடைத்து
அதைச் சுற்றி ஒலி எழுப்பும்;
குளவியின் ஒலி கேட்டு
வளரும் புழு குளவியாகவே
உருவெடுக்கும்;
அதுபோல்
ஆண்டவனை எண்ணியே
அனுதினமும் இருப்போர்
ஆண்டவனாகவே வாழ்வர் என்பது
குளவி எனக்குக்
குருவாய் இருந்துக்
கற்பித்தப் பாடம்;

இவ்வாறு
இந்த
இருபத்தி நான்கு குருக்களிடமிருந்து
இருக்கையில் எப்படி
இருப்பது என்று கற்றுக்கொண்டேன் என
இனிய அவதூதர் சொல்லி முடித்தார்;
இன்னொன்றையும் தொடர்ந்து சொன்னார்;
இந்தச் சரீரம் நமக்கு
இன்ப துன்பத்தை அளிக்கிறது;
இறப்பு பிறப்பு இதில் பிணைந்து
இருக்கிறது;
இதனால் விவேகம், வைராக்கியம் கிடைப்பதனாலே
இவ் உடலும் எனக்கு ஒரு குரு ஆனது;

துவாரகை மன்னன்
ஸ்ரீ கிருஷ்ணன்
தன் நண்பன்
உத்தவனுக்கு
உரைத்த இந்த
அறிவுரைகளே
உத்தவ கீதை எனப்படும்;

                                                                        ( கீதை முடிந்தது )

Thursday, November 10, 2011

உத்தவ கீதை - 7

மீன்,
தூண்டில் புழுவை
உண்ண விரும்பி
வாய் திறக்கும்;
தூண்டிலில் சிக்கி
இறக்கும்;
வாயினைக் கட்டுப்படுத்தாது போனால்
வருந்திச் சாக நேரிடும் என்றெனக்குச்
சொல்லித் தந்தது மீன்;

பிங்களா எனும் விலை மாது,
பெரிய விலை கேட்பாள்; தன்
உடல் விருந்து வைப்பாள்;
நாள்பட நாள்பட
அவள் கெட்ட பணம் தர
ஆருக்கும் மனமில்லை;
அங்ஙனம் மனமிருப்போரிடம்
பணமில்லை;
உறங்காது உடல் விற்று
உயிர் வாழ்வதைத் துறந்து,
மகாவிஷ்ணுவை மனதில் நினைத்து
அவர் பக்தையாகிப் போனாள்;
கெட்ட வழி துறந்து
நல்ல வழியில் செல்வதே
நல்லது என்பது
பிங்களா எனக்குச் சொல்லித் தந்தப்
பாடம்;

'குரரம்' எனும்
குருவி,
மாமிசம் ஒன்றைக் கண்டு
கவ்விப் பறந்தது;
மாமிசத்தின் மீது
மையல் கொண்ட பருந்துகள்
குருவியைத் துரத்தின;
ஆசைபட்டப் பொருளை
அப்படியே தூர வீசிவிட்டு
அங்கிருந்து பறந்தது குருவி;
அதனாலே உயிர் தப்பியது;
ஆசை கொண்டு ஒரு பொருளை
அணைத்துக் கிடந்தாள்
அதனால் இன்பம் கிட்டாது,
துன்பமே கிட்டும் என்று
'குரரம்' என்ற அந்தக் குருவி
குருவாய் இருந்து எனக்குச் சொல்லித் தந்தது;

சிறுவன்,
சிறுக் கவலை கூட இல்லாது,
ஆடிப் பாடி ஓடி விளையாடுகிறான்;
பொறாமை, வெறுப்பு, சூழ்ச்சி போன்ற
எந்தத் தீயக் குணமும் மனதில் கொள்ளான்;
எப்பொழுதும் நல்லவனாய் மகிழ்ச்சியாய்
இருக்கிறான்; அதுபோல்
இருப்பார்க்கு அனவிரதமும்
இன்பம் கிட்டும் என்பதைச்
சிறுவனிடம் நான் கற்றப் பாடம்;


தன்னை
மணம் பேச வந்தவர்க்கு
உணவு சமைக்க
நெல் குத்தினாள் பெண் ஒருத்தி;
கையில் இருந்த வளையல்கலெல்லாம்
கலகல என ஒலியெழுப்ப,
ஒன்று ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு
மற்றெல்லாவற்றையும் கழற்றிவைத்து விட்டாள்;
இதிலிருந்து,
ஒன்றாய் எல்லாரும் உரைக்க
சண்டை மூளும்;
ஒன்று மட்டும் தனித்திருந்தால்
அமைதி தரும் என்று
கன்னி எனக்குக்
கற்பித்தாள் பாடம்;


                                                                        ( கீதை தொடரும் )

Wednesday, November 9, 2011

உத்தவ கீதை - 6

விட்டில் பூச்சி,
விளக்கின் ஒளி
விரைந்தழைக்க அதனோடு
விளையாடித் தன்
வாழ்வை இழக்கும்; அதுபோல் மக்கள்
பிறபொருட்கள் மேல்
பற்று கொண்டால்
அழிவர் என்பது
விட்டில் பூச்சி எனக்கு
வழங்கியப் பாடம்;

தேனீ, மலர் தோறும் பறந்து
தேன் சேகரிக்க ஒருநாள் வேடன் அத்
தேனை அபகரித்துக்கொள்கிறான்;
தேனைச் சேகரித்தத் தேனீ
தேனைப் பருகாமலேயே அதை இழப்பது போல்,
தேவைக்கதிகமாய்
தேடிப் பொருளீட்டி வைத்தால் இழக்க நேரிடுமேன்பதைத்
தேனீ எனக்குச் சொல்லித் தந்தது;

யானை,
வலிமையுடன்
வனத்தில் இருந்தாலும்,
ஆண் ஆனைக்கு பெண்
ஆனை மேல்
ஆலாதிப் பிரியம்.
ஆனையைப் பிடிக்க எண்ணுவோர்
ஆண் ஆனை வரும் பாதையில் பெண்
ஆனையை நிற்கவைத்து இடையில்
அகண்ட பள்ளம் தோண்டி யானையை
அகப்பட வைப்பார்;
அதுபோல் பெண் பின் சுற்றுபவர் துயரில்
அகப்பட்டு வருந்த நேரிடுமென்ற பாடம்
ஆனை எனக்கு
அறிவுறுத்தியது;

வேடன், தேனடைகளை
வேட்டையாடி வருமானமீட்டி
வாழ்வான்;
தேவைகதிகமாய்த்
தேடி வைத்த பொருளைத் தேனீ
வேடனிடம் இழப்பதுபோல்,
தான் அனுபவிக்காது உலோபி
ஈட்டி வைக்கும் பொருளை யாரோ
எடுத்துக்கொள்வர்;
வேடனிடம்
சீடனாய் இருந்து
கற்றப் பாடம்;

இனிய இசை ஒலிக்கும் திக்கு நோக்கித் தன்
இரு காதுகளையும் நீட்டி மெய் மறந்து நிற்கும் மான்.
இதுவே தக்க தருணமென்று
இமை மூடும் நேரத்தில் வலை வீசிப் பிடிப்பர் ஆண்.
இறைவனின் சிந்தை
இல்லா வேறெதிலும் எண்ணம் செலுத்தினால்
இதுபோல் அவதி நேருமென்று
சொல்லித் தந்தது மான்;
கற்றுக் கொண்டது நான்;


அவதூதர்
அரசன் யதுவிற்கு
அறிவித்ததை துவாரகையின்
அரசன் கண்ணன் தன்
அன்பிற்குப் பாத்திரமான உத்தவருக்கு
அறிவுருத்தினான்;

                                                                        ( கீதை தொடரும் )

Tuesday, November 8, 2011

உத்தவ கீதை - 5

அக்னி, தன்னை
அண்டியோரையெல்லாம்
எரித்துச் சாம்பலாக்கும்;
அதனதன் வடிவேடுத்தே
அக்னி அவைகளைக் கரிக்கும்;
அதுபோல் ஆன்மாவும்
ஆக்கையின் வடிவமே கொள்கிறது;
அவரவர் எண்ணம் போல் வளர்ந்து
அந்தியில் அழிக்கிறது;
அக்னி எனக்கு அளித்த பாடமிது;

சந்திரன்
சில காலம் வளர்கிறது,
சில காலம் தேய்கிறது,
இது
நிலவு காரணமில்லாமல்
நிகழும் மாற்றம்;
சூரியஒளி படும்அளவே கொண்டே
அந்த நிலவின் தோற்றம்;
அதுபோல் ஒளிர்வது, மறைவதெல்லாம்
ஆக்கையின் குணங்களே அன்றி
ஆன்மாவிற்கும் அதற்கும் சம்பந்தமில்லை
இது
நிலவு எனக்கு
சொல்லித் தந்தப் பாடம்;

சூரியன் நீரைச்
சுட்டு மேகமாய் மாற்றுகிறது;
பின் அதைக் குளிர்வித்து
மழையாய்ப் பெய்கிறது;
அதுபோல் ஞானியர்
கல்வி கற்று, ஞானம் பெற்று
மற்றவர்க்கு மழை போல் வழங்க வேண்டும்;
சூரியன் எனக்குச்
சொல்லித் தந்தது;

பந்த பாசத்தில் ஒட்டாது
பழகி விலக வேண்டுமென்பது,
பந்த பாசத்தால் ஒட்டி உறவாடி
உயிரிழந்த புறா ஒன்று எனக்கு
உணர்த்தியப் பாடம்;

உணவு தேடித் தான் செல்லாது,
கிட்டிய உணவை உண்டு வாழும்
மலைப் பாம்பு;
உணவு கிட்டாது போனால்
உண்ணாது வாழும்;
அதுபோல் கிடைத்ததைக் கொண்டு,
கிட்டாதது பின் செல்லாதிருக்கும் ஞானம்
மலைப் பாம்பு சொல்லித் தந்தது;

கடல்,
பரந்து விரிந்து உள்ளது;
மழைக் காலத்தில் ஆறுகள்
கலப்பதினால் அளவு நீள்வதில்லை;
வெயில்காலத்தில் ஆறுகள்
காய்வதினால் அளவு குறைவதில்லை;
அதுபோல் ஞானியர்
இன்பம் வருகையில் துள்ளாது,
துன்பம் வருகையில் துயலாது,
இருக்கவேண்டுமென்பது
கடல் தந்த பாடம்.

இன்னும் சொன்னது ...

                                                                        ( கீதை தொடரும் )

Monday, November 7, 2011

உத்தவ கீதை - 4

'அரசே,
அநேக பேர்கள் எனக்குக் குருவாகி
ஆத்மா ஞானம் கற்பித்தார்கள்;
அவர்களிடம் கற்ற ஞானத்தை
அரசர் தங்களுக்கு
அடியேன் கற்பிக்கிறேன்;

மனிதம் மிருகம் எல்லோராலும்
மிதிபடுகிறது;
தோண்டத் தோண்டத் துன்பம்
சகித்துக் கொள்கிறது;
மற்றவர்களுக்குத் தேவையான
எல்லாவற்றையும் தருகிறது இந்த
மண் என்ற பூமி;
இதுவே எனது முதல் குரு;
மக்கள் வருத்தியதை
மண்மாதா மறக்கிறாள்;
மாறாக நெல் கனி பல தருகிறாள்;
துன்பம் தருவோருக்கு
இன்பம் தரவேண்டுமென்பது
இப்பூமியிடமிருந்து நான் கற்ற பாடம்;
உபத்திரவம் செய்வோர்க்கும்
உபயோகமாய் இருப்பதே இதன்
உள்ளர்த்தம்;

வாயு, உடலென்ற நாம்
வாழ உறுதுணையாயிருக்கிறது;
உடல் இன்ப துன்பத்தில்
சிக்குண்டாலும், பணம் பொருள் மேல்
பற்றுகொண்டாலும் வாயு என்ற ஆத்மா
இதிலெல்லாம் அகப்படாமல்
தனித்திருக்கிறது;
அதுபோல் ஞானம் வேண்டுபவன்
தேவையில்லாத பொருட்கள் மேல்
சிந்தை கொள்ளது
தனித்திருக்கவேண்டுமேன்பது
வாயு எனக்கு
வழங்கியப் பாடம்.

ஆகாயம் எங்கும் நிறைந்துள்ளது;
அளவிட முடியாதது;
எதனோடும்
எள்ளளவும் தொடர்பு இல்லாதது;
அதுபோல் ஆன்மாவும்
தனித்து ஒரே நிலையில் இருக்கவேண்டுமேன்மது
ஆகாயம் எனக்கு
அறிவித்த பாடம்.

தண்ணீர்
தனக்கென்று ஓர் நிறமற்றது;
தன்னை நாடி வந்தோர்க்கு
தன்னலம் பாராது நலம் செய்வது போல்,
ஆத்மா ஞானியர்
அண்டுவோர் பாவங்களைப்
போக்க வல்லவர்;
இதனை எனக்கு உணர்த்திய
தண்ணீரும் எனக்கு ஒரு குரு;

இன்னும் சொன்னது ...

                                                                        ( கீதை தொடரும் )

Sunday, November 6, 2011

உத்தவ கீதை - 3

'உத்தவரே,
உறவு மக்கள் என எதன்மீதும்
பாசம் கொள்ளாது,
என்னையே எந்நேரமும்
தியானத்தில் கொள்ளவும்;
என்னைத் தவிர
எல்லாம் மாயை
என்பதை உணரவும்;
மனதை அடக்கு, இந்த
உலகமே நான், இதை அறி;
தொல்லை இல்லை உமக்கு';

'பரந்தாமா, எல்லாவற்றையும்
படைத்தவனே நீ தான்; எதன்மீதும்
பற்று கொள்ளாது துறந்திருக்கப்
பறைபவனும் நீ தான்;
அப்படிப் பற்று கொள்ளாதிருப்பது
எப்படி என்று உபதேசிக்க வேண்டும்,
எந்த தோசமும் இல்லாதவரே,
காலத்தால் அளவிடமுடியாதவரே,
எல்லாம் அறிந்தவரே,
என்றும் அழியாது நிலைத்திருக்கும்
வைகுண்டத்தில்
வசிப்பவரே, நர
நாராயணராக அவதரித்தவரே,
உம்மைச் சரணடைந்தேன்;
எம்மைக் கரையேற்றும்;'

உலகளந்தவன்
உத்தவருக்கு
விளக்கினான்
யது என்ற அரசனுக்கும்,
அவதூதர் என்பவருக்கும்
இடையே நடந்த
வரலாற்றை;

அந்த வரலாறு ...

ஒருமுறை
அரசன் யது
ஆத்மா ஞானம் வேண்டி
அவதூதரை
அணுகினான்;
'அவதூதரே, எல்லாம் அறிந்தும்
ஏதும் தெரியாச் சிறுவன் போல்
இருக்கிறீரே,
அழகிய சரீரம் கொண்டவர்,
அழகாகப் பேசுகிறவர், இருந்தும்
எதன் மீது பற்றிலாது
இருக்கிறீரே,
அறிவிருந்தும் பைத்தியம் போல்
திறிகிரீரே;
காமம் பேராசை போன்றவைகளால்
மக்கள் துன்புற, நீர் மட்டும்
கங்கையில் குளிக்கும் யானை போல்
சஞ்சலமன்றி
இருக்கிறீரே,
இத்தனை ஞானம்
கிடைத்தததெப்படி உமக்கு, அதை
இயம்ப வேண்டும் எமக்கு;'

அவதூதர்
அவருக்கு
அறிவுறுத்தியது ...

                                                                        ( கீதை தொடரும் )

Saturday, November 5, 2011

உத்தவ கீதை - 2

துவாரகா நகரத்தில்
கெட்ட சகுனங்கள் பல
நிகழ்ந்தது;
அது
ஊர்ப் பெரியவர்களை
வருத்தத்தில்
ஆழ்த்தியது;
கிருஷ்ணனிடம்
சென்றனர்;
தமக்கு
வழி காட்ட
வினவினர்;

'நல்லோர் சாபம்
நமை வாட்டுகிறது;
துவாரகை விட்டுச்
செல்வோம்,
பிரபாச தீர்த்தம் நோக்கிச்
செல்வோம்;
அவ்வாறு சென்றால்
உயிர் பிழைப்போம்;
அன்னதானம் செய்வோம்;
நல்ல வழியில் வாழ்வோம்;
நாம் பெற்ற சாபத்தால்
வரும் சங்கடத்தைத் தடுக்க
அதுவே வழியாகும்;'

பரந்தாமன் உரைத்தான்;
அவன் சொல்லுக்குப் பணிந்து
மக்கள் புறப்பட்டனர்
பிரபாச தீர்த்தம் நோக்கி;
வருங்காலத்தில் விழையப்போகும்
இன்னல்களை மனதில் தேக்கி;


பகவான் பேசுவதை எல்லாம்
பொறுமையுடன் கேட்டார் உத்தவர்;
பின் பேசினார்;
'பரந்தாமா, தேவாதி தேவா,
எல்லோரின் இன்னல்களையும் தீர்க்கும்
எசொதை மைந்தா,
தங்களைப் பிரிந்து
எப்படி இருப்பேன் நான் ?
தங்களோடு வைகுண்டம்
வரவேணும் நான்,
இதற்கு அருள் புரிய வேண்டும் நீர்;'


உத்தவரின் தூய
உள்ளத்தையும் அதில்
விளைந்த எண்ணத்தையும் கேட்ட
கிருஷ்ணன் பின்வருமாறு
உரைத்தான்;

'உத்தவரே,
உத்தமரே,
உயர்ந்தவரே,
நாளை
நடக்கப்போதை
நானுமக்குச் சொல்கிறேன்;
கேளும்;
பிரம்மன் கேட்டுக்கொண்ட
பணிகலெல்லாம்
பழுதேதுமின்றி நிறைவேற்றிவிட்டேன்;
பெற்ற சாபத்தால்
யாதவ குலம்
தன்னோடே சண்டையிட்டு
அழிந்துபோகும்;
இன்றிலிருந்து ஏழாவது நாள்
இந்த நிலத்தை
நீர் விழுங்கும்;
என்று நான் இவ்வுலகத்தை விட்டுச்
செல்கிறேனோ,
அன்று முதல் இவ்வுலகத்தை
கலிபுருடன் பிடித்துக்கொள்வான்;
இவ்வுலகம் மங்களம் இழந்து
மாசுபட்டுப் போகும்;
மக்கள் மாக்கள் ஆவார்கள்;
அதர்மத்தையேச் செய்வார்கள்;'

இதனைத் தொடர்ந்து
இன்னும் சொன்னான் கிருஷ்ணன்;
அவை ...


                                                                        ( கீதை தொடரும் )

Thursday, November 3, 2011

உத்தவ கீதை - 1



பரந்தாமன் ஸ்ரீ கிருஷ்ணன்
பூலோகத்தில் தன்
பணியெல்லாம் முடிந்த பின்
வைகுந்தம் திரும்புமுன் மந்திரி
உத்தவருக்கு
உபதேசித்ததே இந்த
உத்தவ கீதை;


பிரம்மனும் மற்ற தேவர்களும்
பரந்தாமனைப் பார்க்க
துவாரகை வந்தார்கள்;
வணங்கினார்கள்;
'கிருஷ்ணா,
கோவிந்தா,
இன்னல் செய்தவர்களையெல்லாம்
இல்லாது செய்தவனே,
மக்கள் துயர் தீர்த்த
மாதவா,
வையம் விட்டு
வைகுந்தம் வா;
எங்களோடு வர வேண்டும் தேவ லோகம்,
எங்கட்கும் வேண்டும் உங்களோடு இருக்கும் யோகம்;'
என்றனர்;
'யாவரையும் படைக்கும் பிரம்மா தேவா,
யாதவர்களின் அழிவு
ஆரம்பமாகிவிட்டது, அறியாயா ?
ஆணவத்தால்
அழியப் போகின்றனர் யாதவர்கள்;
அவர்கள் அழிந்தபின்
அடியேன் வருவேன் மேலோகம்,
அதுவரை இருப்பேன் பூலோகம்' என்றுரைத்தான்;
பிரம்மனையும் மற்றவர்களையும்
அனுப்பி வைத்தான்;
கண்ணன் பேசுவதைக்
கேட்ட உத்தமர்
கலவரமடைந்தார்;
கண் கலங்கினார்;
செய்வதென்னவென்று தெரியாது
திகைத்து நின்றார்;

                                                                        ( கீதை தொடரும் )

Tuesday, November 1, 2011

நாச்சியார் திருமொழி 13

கண்ணனெனும் கருந்தெய்வம்
      
கரு நீலக்
கண்ணனோடு
களிப்போடிருக்கவே இந்த
அவனியில் நான்
அவதரித்தேன்;
என் கண்ணனையும்
எனையும் பிரிக்க
எண்ணுவது
புண்ணில்
புளியைப்
பிழிவது
போன்றது;

கண்ணன் இல்லாது
நான் வாழ்வதேது;
கண்ணனைத் தவிர
வேறு நினைவேது;

என் மேல் இரக்கம் கொள்ளாது
எங்கோ இருந்து கொண்டு
எனைக் கொல்கிறான்;
விரக தாபத்தில் எனை
வதைக்கிறான்;

அவன் திருமேனியில் அணிந்த
ஆடை தாருங்கள்;
அதை விசிறி
அந்தக் காற்றே,
மாதவனைப் பிரிந்து தவிக்கும்
எனக்கு மருந்து;


பாலா லிலையில்
      
பாலகனாய்
ஆலிலையில் துயில் கொண்டவனே
என் துணையாகக் கனவு கண்டேன்;
அவனிடம் நான் என்
மனதைப் பறிகொடுத்தேன்;

ஆயர்பாடியில்
இடையர்களின்
இடையில் பிறந்தவன்,
ஆதிசேசன் மேல்
பள்ளி கொண்டவன்,
அந்தக் கண்ணனிடம் சென்று
இந்தக் கோதை விரக தாபத்தில்
தவிப்பதைச் சொல்லி,
அவன் கழுத்தில் இருக்கும்
குளிர்ந்த துளசி மாலையைக்
கொண்டு வந்து, என்
குழலில் சூட்டுங்கள்;
மாதவனின் அந்த மாலையே எனக்கு
மருந்து;